Wednesday, August 27, 2008

அம்மனோ... சாமியோ!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், அரசு பொது மருத்துவமனைக்கு அருகில் உள்ள சுரங்கப்பாதை ஒரு முனை. எப்போதும் கூட்ட நெரிசலுடனே காணப்படுகின்ற இடம். அநதச் சுரங்கப்பாதையின் அருகே உள்ள ஒரு மரத்தடியில் ஏறக்குறைய ஒன்றரை வருடங்களுக்கு முன் திடீரென ஒரு அம்மன் சிலை வைக்கப்பட்டது. மக்கள் அதிகம் புழங்கும் அந்தச் சிறிய பாதையில் வைக்கப்பட்ட அம்மன் சிலையால் எல்லோருக்குமே சிரமம்தான்.

ஆரம்ப நாட்களில் அம்மன் சிலையும், உண்டியலும், அம்மனை வைத்த அந்த பெண்ணும் சாதாரணமாகவே காணப்பட்டார்கள்.
வெறும் கல்லையும் மரத்தையுமே சாமியாக நினைத்து வழிபடும் நம் மக்களுக்கு சிலையைக் கண்டால் சொல்லவா வேண்டும். அந்த வழியே செல்பவர்கள் அம்மனிடம் தரிசனம் வாங்கிக கொண்டு அங்கிருக்கும் உண்டியலில் காசு போட்டுவிட்டுச் செல்ல ஆரம்பித்தனர். உண்டியல பணம் யாருக்கு? அதை என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. கேட்டால் சாமிக்குத் தேவையானவைகளை வாங்குகிறோம் என்று சொல்வார்களோ என்னவோ!?

அரசு பொது மருத்துவமனையில் சேர்த்து வைத்திருக்கும் நேயாளிகளைப் பார்ப்பதற்காக வரும் பெரும்பாலானோர் தங்களது உறவினர் குணமடைய அம்மனை வேண்டிக்கொண்டு அங்கே உள்ள உண்டியலில், தான் கொண்டுவந்த கொஞ்சநஞ்ச பணத்தையும் போட்டுவிட்டு டாக்டர் மேல் நம்பிக்கையை விடுத்து கடவுள் மீது நம்பிக்கை வைத்துச் செல்வதை அன்றாடம் பார்க்க முடிந்தது. முழுக்க முழுக்க மருத்துவமனைக்கு வரும் பாமர மக்களைக் குறிவைத்தே இந்த அம்மன் சிலை வைக்கப்பட்டதாகத் தோன்றுகிறது.

நாளாக நாளாக சினிமா நடிகைகள் மேக்-அப் போட்டுக்கொள்வதுபோல் பலவித அலங்காரங்களுடன் பூ மாலைகள், எலுமிச்சை மாலைகள் என பெரிய உண்டியலும் சேர்ந்து ஜொலிக்க ஆரம்பித்தது. உண்டியலில் வசூல் களை கட்ட ஆரம்பித்தது... சாதாரணமாக இருந்த அம்மன் பலவிதமான அலங்காரத்துடன் ஜொலிப்பதுபோல அம்மனை வைத்த அம்மணியும் கழுத்தில் நகைகளுடன் ஜொலிக்க ஆரம்பித்தார்.

சுமார் ஒன்றரை வருடங்கள் ஓடிக் கொண்டிருந்த இந்தக் காட்சியை திடீரென ஒருநாள் காணமுடியாமல் பேலுனது. திடீரென இரவோடு இரவாக போலீஸாரால் அச்சிலை அகற்றப்பட்டு அம்மரத்தைச் சுற்றி தடுப்பு ஒன்று போடப்பட்டிருந்தது. அதைப் பார்த்தபோது எனக்கும் என்னுடன் வருபவர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது, ஒருசிலருக்கு வருத்தமாகவும் இருந்திருக்கலாம்.

அம்மன் சிலையை வைத்தபோதே போலீஸார் அதைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால், அதைச் செய்யவில்லை. அடிக்கடி போலீஸாரும் அந்தச்சிலையை எடுக்கும்படி தகராறு செய்வார்கள். அவர்களையும் ஒருவழியாக சமாளித்து அனுப்பிவிடுவார் அந்தப் பெண்மணி. அவ்வுண்டியலில் பணம் அவர்களுக்கும் சேர்த்தே போடப்பட்டிருக்க வேண்டும். ஏனோ கடைசியில் அவர்களாலேயே அகற்றப்பட்டு விட்டது. நடைபாதையில் இடையூறாக இருந்த அம்மனை அகற்றியதும் அவ்விடம் இப்போது பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் செல்லமுடிகிறது. நெரிசல் மிக்க இடங்களில் இதுபோன்ற காரியங்களை அனுமதிக்காமல் ஆரம்பத்திலேயே தவிர்ப்பது நல்லது. எப்படியோ, இடையூறாக இருந்த அம்மன் சிலை காணாமல் போனதில் வருத்தமில்லை, சந்தோஷமே!

5 comments:

சைதை முரளி said...

பயரிங் ஸ்பாட்டுக்கு எப்பவோ எழுதியிருக்கவேண்டிய மேட்டரை காலங்கடந்து பிளாக்கில் எழுதியிருக்கிறாய். பரவாயில்லை, நல்ல தொடக்கம். வாழ்த்துகள்.

இன்று அன்புடன்,
சைதை முரளி.

பிரதிபலிப்பான் said...

நன்றாக இருந்தது அன்பு செய்தி....
முதல் செய்தி அம்மன் செய்தியாக இருக்க வேண்டும் என்பதற்க்காகத்தான் இதை போட்டீர்களா? இல்லை நாத்திக வாதமா? இல்லை சமூக நோக்கமா?

எதுவாக இருந்தாலும் நான் கூட நினைப்பேன் இந்த சிலை அகற்றினால் என்ன என்று, ஆனால் அது நடந்துவிட்டது.எது எப்படியோ மக்களுக்கு இடைஞ்சல்கள் இல்லாமல் இருந்தால் போதும்.

நல்லவேளை மருத்துவமனையையே ஆக்கிரமிக்கும் முன்பாவாது இதை செய்தார்களே அந்தகடவுளுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.

இதுமாதிரி எதிர்காலதிலும் நடக்காமல் இருக்க கடுமையான் சட்டங்களை கொண்டுவரவேண்டும் இந்த தி.(மு).க அரசாங்கம்.

Unknown said...

கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது. இது உண்மை.
ஆனாலும் அந்த அம்மன் கோயில் அகற்றப்பவேண்டியதே!
அது கிடக்கட்டும்... அபாரமான எழுத்து என்னை மகிழ வைத்தது. அவசியம் இதை பத்ரியும் பாராவும் படிக்கவேண்டும்.
- வாசுதேவ்

a.rajaramkumar@gmail.com said...

ஆஸ்பத்திரி அம்மன் நமஹ!

goyindhu said...

வாழ்த்துகள் அன்பு. எழுத்தில் சரளமான நடை தெரிகிறது.(மின் பிம்பங்கள் உபயமா?) உங்கள் ஊருக்கே உரிய நக்கல் ஆங்காங்கே தென்படுகிறது. நீங்கள் இய்லபாகவே அடிக்கும் நையாண்டியை இன்னும் அதிகமாக சேர்த்தால் சுவை கூடும். நிறைய எழுதுங்கள்.